கோவில்பட்டி ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கோவில்பட்டி, காளியப்பர் தெருவைச் சேர்ந்தவர் சா.தேன்மொழி(60), புதுரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு வழக்கம் போல, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை இவரது கடையின் பின் பகுதியிலிருந்து புகை வருவதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தினால் கடையிலுள்ள பொருள்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.