சாத்தான்குளம் அருகே பிரகாசபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை வேறு ஊருக்கு மாற்றக் கூடாது என கிராம மக்கள் சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், ஒன்றிய ஆணையர் செல்வி ஆகியோரை சந்தித்து வியாழக்கிழமை மனு அனித்தனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பிரகாசபுரத்தில் செயல் செயல்பட்டு வரும் அங்கான்வாடி மையத்தில் 30 க்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், கிராம மக்கள் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நிரந்தர கட்டடம் கட்ட வலியுறுத்தினர்.
புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் அளிக்கும் இடம் போதுமானதாக இல்லையாம். இதனால் அதே ஊரில் உள்ள டிவி அறை மற்றும் கழிப்பறையை இடித்து அதில் அங்கன்வாடி மையம் கட்ட வலியுறுத்தப்பட்டது. இதில், கழிப்பறையை இடிக்க கிராம மக்கள் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே அங்கன்வாடி மையம் அமைக்க தெற்கு ராமசாமிபுரத்தில் இடம் தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இதனால் கிராம மக்கள் ஜேசுகோபின் தலைமையில் வியாழக்கிழமை சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், ஒன்றிய ஆணையர் செல்வி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அளித்த மனு; அங்கன்வாடி மையம் எங்கள் ஊரில் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. இதனை வேறு ஊருக்கு மாற்றினால் எங்களது குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும். ஆதலால் அங்கன்வாடி மையத்தை வேறு ஊருக்கு மாற்றக்கூடாது. இதே ஊரில் பயன்படாமல் இருக்கும் டிவி அறை மற்றும் அதன் அருகில் உள்ள கழிப்பறையை அப்புறப்படுத்தி அதே இடத்தில் அங்கன்வாடி மையத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்ற வட்டாட்சியர், சம்பவ இடத்தை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதே போல் ஒன்றிய ஆணையர் செல்வி , வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ( கிராம ஊராட்சி) கலந்து பேசி நடவடிக்கை எடுக்க ஆவண செய்யவதாக தெரிவித்தார். இதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.