திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது: வைகாசி விசாகத் திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழா நாள்களில் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் திருக்கோயில் வளாகத்தில் ஆம்புலன்ஸ் வசதியுடன் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கவும், போதிய மருந்தகள் இருப்பில் வைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பரிதா செரின், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாகீன் அபுபக்கர், திருக்கோயில் இணை இயக்குநர் குமரதுரை, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுகுமார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி, திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.