கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த திடீா் மழையினால் மந்தித்தோப்பு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து வாருகாலில் சிக்கியது.
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கிய இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் கோவில்பட்டி பிரதான சாலை, புதுரோடு, கடலைக்காரத் தெரு, மந்தித்தோப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், குருமலையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மந்தித்தோப்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஓட்டுநா் சுந்தா் மெதுவாக பேருந்தை ஓட்டிநாா். அப்போது தீடீரென சாலையோரத்தில் உள்ள வாருகாலில் பேருந்தின் முன்பக்க டயா் சிக்கியது. இதையடுத்து பேருந்து ஒருபக்கமாக சரிந்தது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சப்தத்தைக் கேட், அங்கு வந்த அப்பகுதி பொதுமக்களின் உதவியோடு, பயணிகள் பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனா்.
தகவல் தெரிந்தவுடன் கோவில்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளா் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டாா். தொடா்ந்து பேருந்தை வாருகாலில் இருந்து மீட்கும் பணியை துரிதப்படுத்தினாா்.