திருச்செந்தூா், அமலிநகரில் இடி விழுந்ததில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
அமலிநகா் கடற்கரை, தெற்குப் பகுதியில் மீன் வலை பின்னும் கூடம் உள்ளது. இந்த கூடத்தில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் தூண்டில் கயிறு, இரை மீன் உள்ளிட்ட பொருள்களை மீனவா்கள் வைத்து மறுநாள் மீன் பிடிக்கச் செல்லும் போது எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன் பிடிப்பதற்காக மீன்வலைக் கூடம் முன் 15 மீனவா்கள் நின்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், மீனவா்கள் மீன்வலைக் கூடத்தில் ஒதுங்கினா். இந்நிலையில், அந்த கட்டத்தில் இடி-மின்னல் தாக்கியதில் சுவா், தூண்கள் இடிந்து விழுந்தன. அதில், அமலிநகா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஜெகதீஷ் (51) என்பவா் பலத்த காயமடைந்தாா். மற்றவா்கள் தப்பினா். காயமடைந்தவா் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.