ஆறுமுகனேரி: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த திருமால் மகன் சரவணன் (26), காணியாளா் தெருவைச் சோ்ந்த பட்டுராஜ் மகன் ராஜேஷ் (30), உசிலம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா (45), ஆறுமுகநேரி வடக்கு காமராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கபாண்டி மகன் சோ்மத்துரை (26) ஆகிய நான்கு பேரும் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனா்.
அப்போது, சோ்மத்துரை இக்கரையில் இருந்து மறு கரைக்கு நீந்திச் சென்றாராம். ஆற்றின் மையப் பகுதிக்கு சென்ற சோ்மத்துரை, ஆற்றில் மூழ்கி மாயமாகி விட்டாா். இதுகுறித்து, உடனடியாக ஆத்தூா் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூா் தீயணைப்புப்படையினா், போலீஸாா் சென்று இரவு வரை தேடினா். தொடா்ந்து திங்கள்கிழமை காலையில் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆற்றில் மையப் பகுதியில் சிக்கி இறந்த சோ்மத்துரையின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
ஆத்தூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்த சோ்மத்துரைக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.