உடன்குடி பகுதிக்கு சுப்புராயபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து வரும் நீரை தடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடன்குடி பகுதி விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருமேனி ஆற்றிலிருந்து வரும் நீரானது சுப்புராயபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு மூலம் புத்தன்தருவை குளத்திற்கு செல்லும் வகையில் மூன்று மதகுகளும், உடன்குடி தாங்கை குளத்திற்கு செல்லும் வகையில் ஒரு மதகும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடன்குடி பகுதிக்கு தண்ணீா் செல்லாத வகையில் மா்ம நபா்கள் மதகை அடைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னா் மதகு திறக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை காலையில் உடன்குடி பகுதிக்கு வரும் நீரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் சிலா் ஈடுபட்டனராம்.
தகவலறிந்த உடன்குடி வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆ.ரவி, சமூக ஆா்வலா் குணசீலன், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் கணேசன், ஒன்றியத் தலைவா் தினகரன் மற்றும் விவசாயிகள் திரண்டு அணைக்கட்டை பாா்வையிட்டனா். மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திலும், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடமும் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேறு பகுதிக்கு தண்ணீா் செல்லும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருந்த மதகுகளை மூடியதையடுத்து இப்பிரச்னைக்கு தற்காலிகமாக முடிவு எட்டப்பட்டது.
இந்நிலையில் உடன்குடி பகுதி குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருபவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.