கன்னியாகுமரி முதல் மும்பை வரை செல்லும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பிரசார குழுவினருக்கு கோவில்பட்டியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெகிழி ஒழிப்பை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பா.அருண். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரர் ஸ்ரீகாந்த். விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாலிமர் சயின்ஸ் பிரிவில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பயணத்தை கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இவர்கள், 12 நாள்களில் மும்பை செல்ல முடிவு செய்துள்ளனர். சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு திங்கள்கிழமை காலை வந்தனர். அவர்களுக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், சாலைப் பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர் முத்துச்செல்வம், ரோட்டரி சங்கச் செயலர் முத்துமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பயணத்தை ரோட்டரி சங்கத் தலைவர் பரமேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, ஆய்வாளர் சுரேஷ், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன், சங்க நிர்வாகிகள் வீராசாமி, பத்மநாபன், மாரியப்பன், நாராயணசாமி, நடராஜன், காளியப்பன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தாமோதரக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.