கோவில்பட்டி அருகே கடத்தப்பட்ட கார் தரகரை மீட்டுத் தருமாறு அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மனைவி செல்வி(34). கார் தரகரான நாகராஜன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாய், தந்தையுடன் இருந்து வருகிறாராம். இந்நிலையில், இம்மாதம் 10 ஆம் தேதி செல்வியிடம் செல்லிடப்பேசியில் பேசிய நாகராஜன், கோவில்பட்டியில் இருப்பதாகவும், இரவில் வீட்டிற்கு வருவதாகவும் கூறினாராம். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லையாம்.
இதையடுத்து செல்வி மீண்டும் அவரிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது, தன்னை ஒருவர் கடத்தி வைத்திருப்பதாகக் கூறினாராம். தொடர்ந்து பேசுகையில், ரூ. 2லட்சத்து30ஆயிரம் மதிப்பிலான காரை ஒருவரிடமிருந்து வாங்கி மற்றொருவரிடம் விற்றதாகவும், காரை வாங்கியவர் பணத்தைக் கொடுக்காமல் சென்றுவிட்டதாவும், அதனால் கார் உரிமையாளர் பணத்தை கேட்டு தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறினாராம்.
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.