கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட வட்டங்களில் அனுமதியின்றி சரள் மண் அள்ளுபவர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாவட்டப் பொருளாளர் கேசவன், நகரத் தலைவர் சண்முகராஜ், ஒன்றியச் செயலர் செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கைகளில் சரள் மண் சட்டியை ஏந்தியபடி, கைகளில் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சரள் மண்ணை அனுமதியின்றி அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தரிடம் வழங்கினர்.