தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பண்டாரம்பட்டி பகுதி மக்கள் மனு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் என்ற பெயரில் கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்போர்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் என்ற பெயரில் கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பண்டாரம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
 தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த வழக்குரைஞர் ராஜேஷ்குமார் தலைமையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் எனும் பெயரில் ஒரு சிலர் ஸ்டெர்லைட் ஆலையிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருக்கும் கிராம மக்களிடையே பிளவினை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 தொடர்ந்து, வழக்குரைஞர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம்  பண்டாரம்பட்டி மக்கள் ஒருபோதும் பயன்களை அடைந்தது கிடையாது. இந்நிலையில் ஊருக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் கிராம மக்கள் சிலர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் மனுவை அளித்துள்ளனர்.
 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உண்மையாக போராடும் எங்களுடைய கிராம மக்களை அதில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் என்று சொல்லிக் கொண்டு பண்டாரம்பட்டி ஊர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com