தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளக் கல்லூரி பொறுப்பு முதல்வர் ப. வேலாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வள அறிவியல் படிப்புக்கு சுயநிதி கல்லூரி தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கான போராட்டத்தில் ஈடுபட்ட 11 மாணவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தகுதியானவர்களை மீன்வள ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுப்பு அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் விடுதியும் மூடப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்
சு. பெலிக்ஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் பல்கலைக் கழக பதிவாளர் அ. சீனிவாசன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) ராஜ்குமார், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு முதல்வர் ப. வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.