கோவில்பட்டியில் கூலித் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 10ஆவது தெருவைச் சேர்ந்த ராமையா மகன் பாலமுருகன்(41). தொழிலாளியான இவர், தன் நண்பருடன் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை பல்லக்கு ரோடு சந்திப்பில் நின்றிருந்தாராம். அப்போது அவரிடம் 2 இளைஞர்கள் பணம் கேட்டனராம். தரமறுத்த அவரை அவதூறாகப் பேசி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
தகவலின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சென்று அந்த இளைஞர்களைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் தெற்குத் திட்டங்குளத்தைச் சேர்ந்த முத்துக்கனி மகன் தெய்வேந்திரன் (25), அதே பகுதி இந்திரா குடியிருப்பு காலனியைச் சேர்ந்த காந்திராஜ் மகன் கவிராஜ் (25) எனத் தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.