தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் கடந்த 16 ஆம் தேதி 9 ஆவது சரக்குதளத்தில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய வகை கப்பலை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
பனாமா நாட்டு கொடியுடன் எம்.வி. என்பிஏ வேர்மீர் என்ற இந்தக் கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும், 14.16 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது ஆகும். இந்தக் கப்பல் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து 89,777 டன் நிலக்கரியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு எடுத்து வந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி எம்.வி. காமாக்ஸ் எம்பரர் என்ற கப்பலின் மூலம் 85,224 டன் சுண்ணாம்புக் கல் கையாளப்பட்டதே சாதனையாக இருந்தது.
இந்த சாதனை குறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன் கூறியது: வஉசி துறைமுகம் நடப்பு நிதியாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5.26 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டுள்ளது. தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழம் உடைய பெரிய கப்பல்களை கையாளுவதால் தென்தமிழகத்தின் சர்வதேச கடல் வாணிபத்தின் அடுத்த நிலைக்கு வஉசி துறைமுகம் முன்னேறி உள்ளது. இந்த சாதனையைப் படைக்க துணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள் என்றார் அவர்.