தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக, தனியார் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி, தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் திருமணி (25).
தூத்துக்குடியில் கடற்கரைச் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர், பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
இவர் விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அம்மாணவர் தொலைபேசி மூலம் அளித்த தகவலின்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, ஆசிரியர் திருமணி மாணவர்களிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகத் தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து, திருமணியைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.