ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கம் செய்துள்ளதை கண்டித்தும், 43 பேருக்கு 8 மணி நேரத்துக்கு பதிலாக 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்குவதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பிஎஸ்என்எல் கோட்ட பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், 150-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் வியாழக்கிழமை (செப். 26) முதல் மூன்று நாள்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தர்னாவில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.