கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கோட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா திட்ட விளக்கவுரையாற்றினார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அவர் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகத்தை வழங்கி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியைப் பார்வையிட்டார்.
முகாமில் 1,134 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முகாமில், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், கடம்பூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் நாகராஜா, மருத்துவர் மற்றும் ஊரக நலப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கி, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், இந்து நாடார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஜெயகுமார், கடம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதூர் நிஷா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் விஸ்வநாத், கயத்தாறு ஒன்றிய அதிமுக செயலர் வினோபாஜி, அதிமுக நிர்வாகிகள் அன்புராஜ், ஞானகுருசாமி, வண்டானம் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் (பொ) திலகவதி நன்றி கூறினார்.