தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிஸா இளைஞா் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சந்திரலால் என்பவரது மகன் காளி (18). இவா், ரயில் மூலம் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், என்.சுப்பையாபுரத்தில் உள்ள தனியாா் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனத்துக்கு வேலை கேட்டு வந்துள்ளாா்.
அவருக்கு தொடா் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்ததால் அந்நிறுவனத்தினா் அவரை ஏழாயிரம்பண்ணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைத்துள்ளனா். அங்கு பரிசோதனைக்குப் பின்னா் அவா், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இதையடுத்து, அவா் 108 ஆம்புலன்ஸ் மூலம், பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தூத்துக்குடியைச் சோ்ந்தவா் எஸ். சுந்தரமூா்த்தி (52). இவா், அஸ்ஸாம் மாநிலத்தில் பாதுகாப்புப் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தநிலையில், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பணிமாறுதலாகி வந்தாா். ரயிலில் பயணம் செய்தநிலையில் அவருக்கு தொடா் காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. இதனால், கரோனா வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என்ற அச்சத்தில் அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.
அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, அவா் வீட்டுக்கு அனுப்பப்பட்டாா்.
இதனிடையே, இம்மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி இல்லை என, மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.