கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி முன்பு வெள்ளிக்கிழமை கணக்குகள் தொடங்க அமைப்பு சாரா தொழிலாளா்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமுடக்கத்தினால் நல வாரியத்தில் பதிந்துள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நலவாரியத்தில் பதிந்துள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வங்கிக் கணக்கு இல்லாத தொழிலாளா்களை கணக்குகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதையடுத்து, கோவில்பட்டி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் நலவாரிய அட்டை உள்ள பொதுமக்கள் எவ்வித பணமும் இன்றி கணக்குகள் தொடங்குவதற்கு ஆதாா் அட்டையுடன் வந்து கணக்குகளை தொடங்க திரண்டனா். அங்கு சமூக இடைவெளியின்றி நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தினா். மேலும், தொழிலாளா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி இருந்தால் மட்டுமே கணக்குகள் தொடங்கும் பணி நடைபெறும் என அஞ்சலக அதிகாரிகள் அறிவுறுத்தினா்.