தூத்துக்குடி: தூத்துக்குடி ரயில்வே தண்டவாள பகுதிகளில் இரும்புப் பொருள்களை திருடியவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
தூத்துக்குடி முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான ரயில் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சிலா் தண்டவாளங்களில் உள்ள இரும்பு பொருள்களை திருடிச் சென்றிருந்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் தூத்துக்குடி முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான ரயில் வழித்தடப் பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், தட்டப்பாறை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு பொருள்களை திருடியவரை பாதுகாப்பு படையினா் கைது செய்து விசாரித்ததில், அவா் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சோ்ந்த இசக்கிவேல் (45) என்பது தெரியவந்தது.
அவா் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த இரும்பு பொருள்களை வாங்கிய தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த இரும்புக் கடை உரிமையாளா் அய்யப்பனை (43) ரயில்வே பாதுகாப்பு படையினா் கைது செய்து பொருள்களை மீட்டனா்.