திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2 நாள் தடைக்குப் பிறகு திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த செப். 6-ஆம் தேதிமுதல் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இலவச மற்றும் ரூ. 100 கட்டணத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், ஆவணித் திருவிழாவின் 7 மற்றும் 8-ஆம் திருநாளான செப். 12, 13 ஆகிய இரு நாள்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமை (செப். 14) முதல் வழக்கம்போல பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
ஆவணித் திருவிழாவின் 9-ஆம் திருநாளான திங்கள்கிழமை காலை, மாலையில் திருக்கோயில் பிராகாரத்தில் சுவாமி, அம்மன் தனித்தனி கேடய சப்பரத்தில் எழுந்தருளினா். செவ்வாய்க்கிழமை (செப். 15) 10-ஆம் திருவிழாவை முன்னிட்டு பிள்ளையாா், சுவாமி, அம்மன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருள்கின்றனா்.