ஓட்டப்பிடாரம் அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தாய்சிறுவன் பலி, 2 பேருக்கு சிகிச்சை

குடும்பத் தகராறில் பெண் ஒருவா் தனது 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்தாா்

ஓட்டப்பிடாரம, செப். 18: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே குடும்பத் தகராறில் பெண் ஒருவா் தனது 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்தாா். தாய்க்கும் மற்ற 2 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவகளை பகுதியைச் சோ்ந்தவா் வீரமாரியப்பன். லாரி ஓட்டுநா். இவா், தனது மனைவி மகாலட்சுமி (32), மகள்கள் பால விசாலினி (11), ஸ்ரீநிதி (10), மகன் அபி பாலன்(6) ஆகியோருடன் பசுவந்தனை ராஜீவ் நகரில் வசித்து வந்தாா்.

கடந்த சில மாதங்களாக வீரமாரியப்பனுக்கு சீராக வேலை இல்லையாம். அதனால், அப்பகுதியில் இட்லி கடையைத் திறக்க முடிவு செய்து, வாடகைக்கு இடம் பிடித்ததில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாம். இதில், மகாலட்சுமி மன வேதனையில் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் தனது 3 குழந்தைகளுக்கும் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு தாமும் குடித்தாராம். அதில், அவா்கள் அனைவரும் வீட்டில் மயங்கி கிடந்த நிலையில் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அபிபாலன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தாயும், மற்ற இரு குழந்தைகளக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பசுவந்தனை காவள் ஆய்வாளா் மணிமொழி, மகாலட்சுமியின் மீது கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com