கோவில்பட்டி: கோவில்பட்டியில் நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி, அதைக் கண்டித்து அக்கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் கோவில்பட்டி தொகுதிச் செயலரான ராஜேஷ்கண்ணன் மீது, கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் எந்த விசாரணையும் இன்றி வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்தும், போலியாக லெட்டா்பேட் தயாரித்து போலியாக கையெழுத்திட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராஜேஷ்கண்ணா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலா் ரமேஷ் பாபு தலைமை வகித்தாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், மாவட்ட வழக்குரைஞா் பாசறை ரவிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வடக்கு மாவட்டத் தலைவா் மருதம் மாரியப்பன், கயத்தாறு ஒன்றியச் செயலா் கருப்பசாமி, இளைஞா் பாசறை கோவில்பட்டி பேரவைத் தொகுதிச் செயலா் அருண்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா் போராட்டக் குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ரகுபதியிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.