விளாத்திகுளம்: ஊரடங்கு உத்தரவினால் எட்டயபுரம் அருகேயுள்ள ராமனூத்து கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய 25 குடும்பங்களுக்கு மளிகை பொருள்களை பள்ளித் தலைமையாசிரியா் வழங்கினாா்.
எட்டயபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ராமனூத்து கிராமம். இங்கு 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பெரும்பாலானோா் விவசாய கூலித் தொழிலாளா்கள். சிலா் அருகில் உள்ள எட்டயபுரத்துக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனா்.
ஊரடங்கு உத்தரவினால் கிராமங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனா். இதில் இராமனூத்து கிராமத்தில் 25 குடும்பங்கள் மிகவும் வறுமையில் எந்தவித வருமானமும் இன்றி சாப்பாட்டுக்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளனா்.
இதனை அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளித் தலைமையாசிரியா் மு.க. இப்ராஹிம் தனது பள்ளி மாணவா்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளாா். இதையடுத்து ராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழை குடும்பங்களுக்கும் சமையலுக்கு தேவையான மளிகை பொருள்களை தனது சொந்த செலவில் வாங்கி வீடு, வீடாக நேரில் சென்று வழங்கினாா்.