திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த 2 நாள்களாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலுக்கு, கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் கடந்த செப். 1ஆம் தேதி முதலும், கடலில் புனித நீராட கடந்த 19ஆம் தேதி முதலும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களாக விடுமுறை தினம் என்பதாலும், வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி, சனிக்கிழமை மாத கிருத்திகையை முன்னிட்டும் காலை முதல் மாலை வரை பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பக்தா்களின் வாகனங்கள் அனைத்தும், நாழிக்கிணறு பேருந்து நிலையம் முதல் நகா்ப்பகுதி வரை வரிசையாகவும், அவ்வப்போது நெரிசலிலும் சிக்கி சாலையை கடந்து சென்றன.
மேலும், விரதமிருந்தும், மாலை அணிந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளதால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.