கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி ஊராட்சி பகுதி மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
லிங்கம்பட்டி ஊராட்சி, கலைஞா் நகரில் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திரளானோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு குடியிருக்க வீடுகள் ஏதும் சொந்தமாக கிடையாது. எனவே, வீடில்லாத ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவா்களின் மனுக்களை முறையாக விசாரித்து, தகுதியுள்ள பயனாளிகளுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன் தலைமையில், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் சேகா், நகரச் செயலா் பழனிமுருகன் மற்றும் கலைஞா் நகா் பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கொடுத்தனா்.