குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணா்வு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணா்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் நடைபெற்றது.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஹேமா தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் -சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின்போது, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2013, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2018, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கான திட்டம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இழப்பீட்டுத் தொகை பெற நீதிமன்றம் மூலமாகவும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாகவும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் 10 பெண் வழக்குரைஞா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.