ஆலந்தலையில் ரூ. 52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்ததையடுத்து, கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட ஆலந்தலை மீனவ கிராமத்தில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீன்பிடித் தொழிலே பிரதானமான இங்கு, கடல் அரிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆலந்தலையில் ரூ.52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அறிவித்தாா். இதையடுத்து, ஆலந்தலை ஊா் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.