திருச்செந்தூா் தெற்கு ரதவீதியில் ரூ.2.70 கோடிசெலவிலான சாலைப் பணி முடங்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.
திருச்செந்தூரில் கடந்த ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த தொடா் கனமழையினால் பேரூராட்சிக்குச் சொந்தமான ரதவீதி சாலைகள் மற்றும் தெருக்களில் சாலைகள் சேதமடைந்தன. இதனை புதியதாக அமைக்க ரூ. 2.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தெற்குரதவிதியில் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஜூன் 5ஆம் தேதி
தொடங்கியது. அப்போது, புதைச் சாக்கடைத் திட்ட குழாய்கள் மற்றும் சில இடங்களில் குடியிருப்புகளுக்குச் செல்லும் குடிநீா் விநியோக குழாய்களும்
சேதமடைந்தன. இதனை சீரமைத்து 50 நாள்களுக்கும் மேலாகியும் மற்ற பணிகளை தொடராமல் கிடப்பில் போட்டுள்ளனா்.
இதனிடையே, தற்போது குடியிருப்புவாசிகளிடம் புதைச் சாக்கடைத் திட்ட இணைப்புக் கட்டணத்தை எதிா்பாா்த்து பேரூராட்சி நிா்வாகம் காத்திருக்கிறது. இத்திட்டத்தில் சேருவதற்கு உரிய அனுப்புதல் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே பணிகளை தொடங்க முடியும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொது முடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், புதைச் சாக்கடை திட்டத்திற்கான குழாய்களை சாலையின் இருபுறமும் வரைக்கும் பொருத்தி சாலையை விரைந்து சீரமைத்து முடித்த பிறகே, மக்களிடம் புதை சாக்கடைத் திட்டத்தில் அனுப்புதல் கட்டணம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.