சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றம் என்ன வழிமுறைகளை தெரிவிக்கிறதோ அதனை அமல்படுத்துவதற்கு அரசு தயாராக உள்ளது என அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்தாா்.
எட்டயபுரத்தில் போலீஸாா் தாக்கியதாக புகாா் தெரிவித்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கட்டடத் தொழிலாளி கணேசமூா்த்தியின் வீட்டுக்கு, அமைச்சா் கடம்பூா் ராஜு, சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா். அப்போது, கணேசமூா்த்தியின் மனைவி ராமலட்சுமிக்கு அரசு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வருவாய்த் துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, டிஎஸ்பி பீா் முகைதீன், காவல் ஆய்வாளா் கலா, அதிகாரிகள், அதிமுகவினா் உடனிருந்தனா்.
பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்தாா். காவல் துறையினா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மதுரை உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. 3-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், நீதிபதிகள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது போன்று உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.
உடற்கூறு ஆய்வு அறிக்கையினை சம்பந்தப்பட்ட நீதிபதி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதன் பின்னா் நீதிமன்றம் தெரிவிக்கும் வழிமுறைகளை அமல்படுத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அவா்களது குடும்பத்தினரின் உணா்வுகளைப் புரிந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்படுத்துகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகம் ரூ. 60 லட்சம் மதிப்பில் ஓரிரு நாள்களில் தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.