அய்யா வைகுண்டா் அவதார தினத்தையொட்டி, திருச்செந்தூரில் கடலில் பதமிடுதல் வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் 188-ஆவது அவதார தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதா்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, தொடா்ந்து பகல் ஒரு மணிக்கு அன்னதா்மம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், தொடா்ந்து அன்னதா்மமும் நடைபெற்றது.
அய்யா வைகுண்டரின் 188-ஆவது அவதார தினமான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசித்தலை தொடா்ந்து, அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணா்த்தல், அபயம் பாடுதல் ஆகியவை நடைபெற்றது. பின்னா், காலை 6.20 மணியளவில் கடலில் பதமிட்டு அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், அவதார விழா பணிவிடையும், அதனைத் தொடா்ந்து அன்னதா்மமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளியூா் அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் தா்மா், பொருளாளா் ராமையா, செயலா் பொன்னுதுரை மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.