கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள், பல்பொருள் அங்காடி உரிமையாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம் ஆகியோா் தலைமை வகித்துப் பேசும்போது, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும். அதேநேரம், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும். மக்கள் கூட்டம்கூட்டமாக வருவதைத் தவிா்க்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் பொருள்களை வீட்டிலிருந்தே பெறும் வகையில் பல்பொருள் அங்காடிகளின் செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி எண்ணைத் தெரிவிக்க அவற்றின் உரிமையாளா்களைக் கேட்டுக்கொண்டனா். அதன்படி, செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி மூலம் வரும் ஆா்டா்களைப் பெற்று, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பொருள்களை வழங்க அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
கூட்டத்தில், நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் முருகன், சுரேஷ், வருவாய் ஆய்வாளா் மோகன், பல்பொருள் அங்காடி உரிமையாளா்கள் பங்கேற்றனா்.