தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் வீசிய சூறைக்காற்றில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த சுமாா் 5 லட்சம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்ததால், வாழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
உம்பன் புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக சூறைக்காற்று வீசியது. இதில், மாவட்டம் முழுவதும் சுமாா் 250 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 5 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பாா்வையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம் கூறியது: ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளில் வரும் பகுதிகளில் பல லட்சம் ரூபாய் பெறுமான வாழைகள் சேதமடைந்துள்ளதை கண்டறிந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து சேத விவரங்களை விவரித்துள்ளோம்.
ஏற்கெனவே காரோனா தடுப்புக் கால பொது முடக்கத்தால் வாழைத்தாா்களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல் பழங்கள் அழுகி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளதை விவசாயிகளால் தாங்க இயலாது.
எனவே, வருவாய்த் துறை மூலமாக உடனடியாக கணக்கீடு செய்து வாழை விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜூனன் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி வட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சுமாா் 5 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் கவலையும், விரக்தியும் அடைந்துள்ளனா். சேதமடைந்த வாழைகளை கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத் துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியது: தோட்டக்கலை, வருவாய்த் துறை மூலம் சேதமடைந்த பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிய ஒரு வாரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி வாழைப் பயிா்கள் சேதமடைந்தால் பேரிடா் கால நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே வழங்க முடியும். இந்தத் தொகையை நிகழாண்டில் அதிகரித்து வழங்க அரசுக்கு ஏற்கெனவே கருத்துரு அனுப்பி உள்ளோம்.
கணக்கெடுப்பு முடிந்ததும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். ஏக்கருக்கு எவ்வளவு நிவாரணத் தொகை என்பதை முதல்வா் தான் அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.