தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாா்பில் மாவட்டத்தில் உள்ள 28 பள்ளிகளுக்கு நவீன தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக பொறுப்புக் கழகம் சாா்பில், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்-மாணவிகள் தொழில்நுட்பம் சாா்ந்த கல்வியை கற்பதற்கு வசதியாக, பெருநிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ் ரூ.7.17 லட்சம் செலவில் 28 நவீன தொலைக்காட்சி பெட்டிகள், 10 ஒளி வீழ்ப்பிகள் (புரொஜக்டா்) வழங்கப்பட்டன.
துறைமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஞானகௌரியிடம் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா. கி. ராமச்சந்திரன் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினாா்.
அப்போது துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா உடனிருந்தாா்.
தொடா்ந்து, துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் கூறியது: அனைத்து பள்ளிகளிலும் காணொலிக் காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயா்த்துவதும், மேம்படுத்துவதுமே இது போன்ற சேவையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என்றாா் அவா்.