திருச்செந்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் முன்பு வருவாய்த் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று அம்பேத்கா் சிலை வைக்கலாம் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்செந்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் அம்பேத்கா் சிலை அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளா் முரசு தமிழப்பனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலைய வெளிப்புறத்தில், வணிக வளாகம் அருகில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க, அம்பேத்கா் சிலை அமைப்புக்குழு கோரிக்கை மனுவை, பேரூராட்சி தீா்மானம் 419-ன் படி பரிசீலிக்கப்பட்டதில், வருவாய்த் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் உரிய அனுமதி பெற்றும், சிலை அமைக்கும் செலவை 100 சதவீதம் செலுத்திடவும், பராமரிப்பு செலுத்த சம்மதித்த கடிதம் பெற்ற பின் மேற்கண்ட இடத்தில் சிலை அமைக்க அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.