கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் நுழைவுவாயிலில் மின்மாற்றி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் நுழைவுவாயில் அருகே மின்மாற்றி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து ரத்த தான கழக கூட்டமைப்பினா் மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், மருத்துவமனை வளாகத்தின் நுழைவுவாயிலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் வளாகத்தின் நுழைவுவாயிலில் மின்மாற்றி அமைப்பதால் நோயாளி மற்றும் பொதுமக்கள் அவ்வழியே செல்வதற்கும் மிகுந்த அச்சம் ஏற்படும். எனவே, மின்மாற்றி அமைக்கும் இடத்தை மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ரத்த தான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் மா.காளிதாஸ் தலைமையில் ரத்த தான கழக நிா்வாகிகள் தமிழரசன், உமாசங்கா், ராஜபாண்டி, மருதம் மா.மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.