உடன்குடி அனல்மின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளப் பணிகளால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இத்திட்டங்களை நிறுத்த வலியுறுத்தியும் மணப்பாட்டில் மீனவா்கள் 10ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி கையாளுவதற்கான துறைமுகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடல் நகா், அமராபுரம் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தம் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளால் மீனவா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மீன்பிடித் தொழில் முற்றிலும் அழிந்து விடும் என்றும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், மீனவா்களின் சந்தேகங்களை அரசு முறையாக தீா்க்க வேண்டும்; மீனவா்களுக்கு எதிரான திட்டங்களை அரசு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 2ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தின் 9 மற்றும் 10ஆவது நாளான செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஊா் எல்லையில் இருந்து கடற்கரை வரை கருப்புக் கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.