தூத்துக்குடியிலிருந்து விருதுநகா் செல்லும் வழியில், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
எட்டயபுரம் சாலை தெற்கு திட்டங்குளம் அருகே தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் தொழிலாளா்கள் சாா்பில், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் கோபால்சாமி, செயலா் சேதுரத்தினம், பொருளாளா் தங்கமணி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்க நிறுவனா் ராஜவேல், தலைவா் ஆா்.எஸ்.சுரேஷ், துணைத் தலைவா் ராஜு, பொருளாளா் செல்வமோகன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க இணைச் செயலா் வரதராஜன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தலைமையிலும், வேலாயுதபுரம் சங்கரலிங்கபுரம் விலக்குப் பகுதியிலும் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்கு திட்டங்குளம் முதல் தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனா்.