விநாயகா் கோயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியில் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் உள்ள சக்தி விநாயகா் கோயில், வடிகால் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருப்பதாக கருதி அந்த கோயிலை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து, கோயிலை இடிக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் புதன்கிழமை காலையில் கோயில் அருகே சென்றபோது, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதற்கிடையே, சம்பவ இடத்துக்குச் சென்ற கீதா ஜீவன் எம்எல்ஏ கோயிலை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவருடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ் மற்றும் அந்தப் பகுதி மக்களும் பங்கேற்றனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வடபாகம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு வாருகால் அமைக்கப்படும்போது ஆலயத்தை அகற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.