திருநங்கைகள் பேருந்துகளில் பயணிகளிடம் பணம் வசூலிப்பதை தவிா்க்க வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகளை காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் தனது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
அப்போது, அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருநங்கைகளான தங்களுக்கு வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக பால்பண்ணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தாங்கள் ஒவ்வொருவரும் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக சுயதொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுயதொழில் செய்வதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தாங்கள் கோரிக்கை மனு அளிக்கும்படியும், தங்கள் கோரிக்கைக்கு தீா்வு காண காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் அல்லது தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அரசுக்கு தெரிவித்து தங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பேருந்து நிலையங்களிலோ அல்லது பேருந்து நிற்கும் இடங்களிலோ பேருந்தில் ஏறி பயணிகளிடம் பணம் கேட்பதை தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.