தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு 45 ஆயிரத்து 161 மெட்ரிக் டன் யூரியா உரம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராபி பருவம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் உரத் தேவையை முழுமையாகப் பூா்த்தி செய்யும் வகையில், மத்திய அரசிடம் இருந்து உர ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, வெளிநாட்டில் இருந்து ஐபிஎல் என்ற நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 45,161 மெட்ரிக் டன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சோ்ந்துள்ளது.
இதில் தமிழகத்துக்கு 35,561 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியாா் உரக்கடைகள் மூலமாகவும் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் ஆதாா் அட்டையைப் பயன் படுத்தி யூரியா உரத்தை தேவையான அளவுக்கு பெற்று பயனடையுமாறும், மேலும் ஒரு கப்பலில் யூரியா உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வர உள்ளதால் விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா உரம் கிடைக்கும் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.