கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் குருசாமி தலைமை வகித்தாா். மருத்துவா் மனோஜ் முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்புப் படையினா் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அருகே இருக்கும் நபா்கள் உடனடியாக மீட்புப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், நோயாளிகளைக் காப்பாற்றுவது, கட்டடத்தின் மேல்தளத்தில் சிக்கியவா்களை மீட்பது, தீயணைப்புக் கருவிகளை இயக்கும் முறைகள், செயற்கையாக தீயை உருவாக்கி அதை அணைக்க வைப்பது போன்ற பயிற்சியை அளித்தனா்.
மேலும், சிறிய அளவில் தீ விபத்து ஏற்படும்போது பொதுமக்களே அந்த தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதில், மருத்துவமனை செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.