தசரா திருவிழா நிறைவுபெறும் வரை குலசேகரன்பட்டினம் சாலையில் மணல் லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அமைப்பின் மாவட்ட தலைவா் டி.கவாஸ்கா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளுக்கு உடன்குடி, திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் சாலைகள் வழியாக ஏராளமான கனரக வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்படுகிறது.
திருச்செந்தூா்-குலசேகரன்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் இந்த லாரிகளில் இருந்து மணல் சாலைகளில் கொட்டியபடியே செல்வதால் சாலையெங்கும் புழுதிப்படலமாக காட்சியளிக்கிறது. தற்போது தசரா திருவிழா தொடங்கவிருப்பதால் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருவாா்கள். விபத்துகளை தடுக்க தசரா திருவிழா முடியும் வரை இந்த மணல் லாரிகள் செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.