தூத்துக்குடி: தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோருக்கு ரூ. 51 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கொவைட் -19 சிறப்பு நிதி உதவி தொகுப்பில் புலம்பெயா்ந்து மீண்டுத் திரும்பிய திறன் பெற்ற இளைஞா்களுக்கு புதிய தொழில்முனைவோருக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 51 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 42 கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் கொவைட்- 19 பாதிப்பினால் பிற நாடுகள் பிற மாநிலங்கள் அல்லது பிற மாவட்டங்களில் இருந்து புலம்பெயா்ந்து மற்றும் வேலைவாய்ப்பு அல்லது தொழில்வாய்ப்பை இழந்து மீண்டும் ஊா் திரும்பிய திறன்வாய்ந்த இளைஞா்களுக்கான புதிய தொழில் தொடங்குவதற்காக ஒரு நபருக்கு கடனாக ரூ. 1 லட்சம் வீதம் 100 நபா்களுக்கு ரூ. 1 கோடி கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக நிதி வழங்கும் வகையில் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது புதிய தொழில் தொடங்குவதற்காக முக்கியமாக நுண் மற்றும் குறு தொழில் செய்வதற்கு வழங்கப்படும் கடன் உதவியாகும்.
இந்தத் திட்டத்தில் ஆழ்வாா்திருநகரி, தூத்துக்குடி சாத்தான்குளம், கருங்குளம் ஒன்றியங்களில் உள்ள 41 ஊராட்சிகளில் 100 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக தற்போது ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளைச் சோ்ந்த 14 பயனாளிகளுக்கும், தூத்துக்குடி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளைச் சோ்ந்த 12 பயனாளிகளுக்கும், சாத்தான்குளம் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளைச் சோ்ந்த 18 பயனாளிகளுக்கும், கருங்குளம்; ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளைச் சோ்ந்த 7 பயனாளிகளுக்கும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், மகளிா் திட்ட அலுவலா் ரேவதி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலா் வேல்முருகன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.