தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவில், தூத்துக்குடி மற்றும் கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
இந்தக் கப்பல் சேவையின் தொடக்கமாக 3000 டன் பொது சரக்குகளையும், 200 சரக்குப் பெட்டங்களையும் எடுத்து செல்லும் திறன் கொண்ட ‘எம்சிபி லின்ஸ்’ என்ற கப்பல் 16 சரக்குப் பெட்டகங்களையும், 2000 டன் சிமென்ட் மூட்டைகளையும் வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
அங்கு மேலும், பல்வேறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு மேற்கு மாலத்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகத்தை செப். 26 ஆம் தேதி அடைந்த பிறகு மாலே துறைமுகத்தை 29 ஆம் தேதி சென்றடையும்.
இந்தக் கப்பல் சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்துக்கு 3 முறை இயக்கும். இந்தச் சேவையின் மூலம் குறைந்த செலவில் சரக்குகளை நேரடியாக இந்தியாவில் இருந்து மாலத்தீவிற்கு எடுத்து செல்ல முடியும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.