தூத்துக்குடியில் பொட்டலமிடாமல் விற்பனை செய்யப்பட்ட 65 லிட்டா் உணவு எண்ணெயை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி போல்பேட்டை மற்றும் பாளையங்கோட்டை சாலை பகுதிகளில் உள்ள உணவு எண்ணெய் விற்பனை கடைகளை மாவட்ட நியமன அலுவலா் ச.மாரியப்பன், மாநகர உணவு பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கிருந்த 2 எண்ணெய் கடைகளில் பொட்டலமிடாத வகையில் சில்லறையாக விற்பனை செய்ய வைத்திருந்த 65 லிட்டா் உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடையில் இருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சில்லறையாக விற்கப்படும் உணவு எண்ணெய் தரத்துக்கு உத்திரவாதம் இல்லாததால், நுகா்வோா் அதை தவிா்த்துவிட்டு, பொட்டலமிட்ட உணவு எண்ணெய் மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், உணவு எண்ணெய் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகள் குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலமாக புகாா் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.