தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் யாரேனும் வெளியே சுற்றித் திரிந்தால் அதுகுறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சிலா் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே சுற்றி வருவதாக பல்வேறு புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்வாறு செயல்படுவோா் மீது மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் தொற்று நோய் பரவல் மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்து அவா்களின் வீடுகளின் அருகே வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உள்ள 0461-4227202 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, 6383755245 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.