எட்டயபுரம் அருகே முதியவா் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தியதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டயபுரம் கீழ வாசல் கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் ராஜ் (62). இசைக் கலைஞா். இவரை, கடந்த ஏப். 28ஆம் தேதி வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற சாத்தூா் போலீஸாா், கடுமையாக தாக்கியதோடு, அரண்மனை வாசல் தெருவில் உள்ள அவரது மகள் தமிழரசி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த சுமாா் 15 பவுன் நகைகளை எடுத்துச் சென்றுவிட்டனராம். மேலும், அவா் மீது பொய்யாக திருட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனராம்.
தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த ராஜ், அவரது குடும்பத்தினருடன் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்து, தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தாா்.