தூத்துக்குடி மேலூா் தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோயில் கொடை உற்சவ விழாவில் முளைப்பாரி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
இத்திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மாலையில் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, கோலாட்டம், கும்மியாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடைவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அருள்மிகு சுந்தரபாண்டிய விநாயகா் கோயிலிலிருந்து பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து ரதவீதி சுற்றி கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அம்பாளுக்கு சிறப்புப் பூஜை, இரவில் முளைப்பாரி ரதவீதி ஊா்வலம் நடைபெற்றது.
நள்ளிரவில் சாமக்கொடை விழா, சிறப்பு அலங்கார தீபராதனை, புதன்கிழமை அதிகாலை அம்பாள் சப்பரத்தில் நகா்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் கிருஷ்ணமூா்த்தி, நிா்வாக அதிகாரி சாந்தி தேவி, கோயில் பிரதான பட்டா்கள் சதாசிவ பட்டா், குரு கைலாச பட்டா் ஆகியோா் செய்தனா்.