கரோனா தடுப்புப் பணியில் கல்லூரி மாணவா்கள்
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது கரோனா பரவல் தடுப்புப் பணியில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே
வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். மேலும், வாக்காளா்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, அவா்களுக்கு கை கழுவும் திரவம், வலது கையில் போடும் தற்காலிக கையுறை ஆகியவை வழங்கப்பட்டது. இப்பணிகளில் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
வாக்களித்த பின்னா் கையுறையை அங்குள்ள குப்பைக் கூடையில் போடுமாறு மாணவா், மாணவிகள் அறிவுறுத்தினா். காய்ச்சல் பாதிக்கப்பட்டோா், கரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.